கடன் இல்லாமல் வாழ்வது எப்படி? How To You Live A Debt Free Life.

நீங்கள் வாழ்வில் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தினை அடைய எண்ணினால் உங்களிடம் கடன்கள் என்ற ஒன்று இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி கடன்கள் இருந்தாலும் அக்கடன்களை அடைப்பதற்கான வழிகளை நீங்கள் பின்பற்றி வரவேண்டும். உண்மையில் நீங்கள் வாங்கும் சம்பளம் முதலில் சேமிப்பு கணக்கிற்கு செல்கிறதா அல்லது கடன்களை அடைக்க மாதா மாதம் EMI-யை செலுத்தி கொண்டு இருக்கின்றீர்களா என்று எண்ணி பாருங்கள்.

                      
ஒரு நபர் கடன்கள் இல்லாமல் வாழ்ந்து வந்தால் அவர் எவ்வாறு இருக்கலாம் என்று இக்கட்டுரையில் காணலாம். நீங்கள் இது நாள் வரை கடன்களை வாங்கி கொண்டும் அதற்கு வட்டி என்ற ஒன்றை கட்டி கொண்டும் இருந்தால் இக்கட்டுரையின் மூலம் கடன்கள் இல்லாமல் இருந்தால் எவ்வாறு இருப்பீர்கள் என காணலாம்.

கடன் இல்லை என்றால் பணத்தின் வரவு அதிகரிக்கும்:

உங்களுக்கு மாதா மாதம் பண வரவு அதிகமாக இருக்கும், இதனை ஆங்கிலத்தில் Cash Flow என்று சொல்வார்கள். கடன் இருக்கும் போது, உங்களுடைய சம்பளத்தின் பெரும் பகுதி கடன்களை அடைப்பதற்கே சென்று விடும். கடன்களை அடைத்தப்பின்பு உங்களுக்கு மாதா மாதம் பணவரவு அதிகரிக்கும். அதிகரிக்கும் பணவரவின் காரணமாக நீங்கள் அதிகமாக சேமிக்க முடியும். அதிகமாக முதலீடு செய்ய முடியும். சீக்கிரமாக முதலீடு தொடங்கும் பட்சத்தில் நீண்ட காலத்தில் நல்ல ஒரு பெருக்கத்தினை அடைய முடியும்.

கடன் என்ற அடிமைத்தனம் இருக்காது:

கவிசக்கரவர்த்தி கம்பர் சொன்னது போல் "கடன்பட்டார் நெஞ்சம் போல், கலங்கினான் இலங்கை வேந்தன்" கடன் பட்டவரின் மனநிலையானது அடிமைபட்டவரின் மனநிலையைப் போன்றதே. கடனைத் திரும்பித்தரும் வரை கடன் பட்டவரை விட கடனைக் கொடுத்தவருக்கே கடனுக்கு அடகு வைத்த பொருளின் மேல் அதிக உரிமை உள்ளது. உதாரணமாக, ஒருவர் 20 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி அதில் 19 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதம் ரூபாய் 1 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் போனால் கூட வங்கியினால் வீட்டினை ஜப்தி செய்து கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

கடன் பட்ட பொருளுக்கு இரண்டு சொந்தக்காரர்கள் உள்ளனர். உதாரணமாக, கடனில் வாங்கிய வாகனம் அல்லது வீடு. பதிவு செய்யப்பட்ட சொந்தக்காரர் (Registered owner) மற்றும் சட்டப்படி சொந்தக்காரர் (Legal owner). சட்டப்படி சொந்தக்காரருக்கே அதில் அதிக உரிமை. கடன் கட்டாத சமயத்தில் சட்டப்படியான சொந்தக்காரர் கடன் பட்ட பொருளை பறிமுதல் செய்ய உரிமை உண்டு.

எனவே, கடன் கட்டும் வரை கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமையாகவே உள்ளார்.

கடன் இல்லை என்றால் மனதில் நிம்மதி அதிகரிக்கும்:

கடன் முன்பு சொன்னதைப் போல் கடன் கட்டும் வரை மனதிற்கு உளைச்சலைக் கொடுக்கும். நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு பிடிக்காவிட்டால் கூட கடன் தவணை கட்ட வேண்டுமே என்பதற்காக வேண்டா வெறுப்பாக செய்ய வைக்கும். உங்களுடைய மேலதிகாரியிடம் வேலை இழக்க கூடாது என்பதற்காக எல்லாவற்றுக்கும் தலை ஆட்டி தன்மானத்தை குலைக்க வைக்கும் மன உளைச்சலை கொடுக்கும். கடன் இல்லாத பட்சத்தில் உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கும். நிம்மதியாக உறங்க முடியும். உடல் நலம், மன நலம் மேம்படும்.

நல்ல கடன்களுக்கு சில விதிவிலக்குகள் உண்டு:

வீட்டுக் கடன் ( Home Loan ), படிப்பிற்கான கடன் ( Education Loan) , Business Loan போன்ற கடன்கள் விதி விலக்குகள். இவை பிற்காலத்தில் பல மடங்கு நமக்கு உதவும். வீட்டிற்கு வரிசலுகை அரசாங்கமே கொடுக்கிறது. அது அத்தியாவசிய தேவை. அந்தக் கடன்களை கூட சீக்கிரமே அடைத்து நிம்மதியை அடைவோம். மற்ற எல்லாவற்றுக்கும் பணம் சேர்த்து பின்னரே வாங்க வேண்டும். கடன் எந்த ரூபத்திலும் வேண்டாம்.

கடனின் அசல் மற்றும் வட்டியின் மூலம் அதிகமான பணத்தை இழக்க வேண்டாம்:

 அந்தப் பணத்தை நீங்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபம் ஈட்டி உங்களுடைய பணத்தின் மதிப்பு கூடும். கடன் வாங்கும்போது நீங்கள் முதலீட்டினை எதிர்பதமாக செய்கிறீர்கள். அதுவும் கூட்டு வட்டி போன்ற கடன் அட்டை கடன்களில் மாட்டிக் கொண்டால் நீங்கள் குழி பறித்துக் கொண்டு படி ஏறி மேல வர முயற்சிப்பதைப் போல் கூட்டி வட்டி கடன் உங்களை தினம் தோறும் மேலும் மேலும் கடனாளி ஆக்கும்.

பல்வேறு முதலீட்டுக்கான தங்கமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்:

உங்களிடம் அதிகமான பணம் இருக்கும்போதுஎந்த ஒரு முதலீடு செய்வதற்கும் எந்த ஒரு தங்க வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும் உங்களிடம் பணம் இருக்கும். உதாரணமாக: ஒரு பங்கு மிக குறைந்த விலையில் வரும்போது அதனை வாங்குவதற்கு கையிருப்பு பணத்தை உபயோகிக்கலாம். அந்த பங்கு பின்னர் பன்மடங்கு பெருகி உங்களுக்கு உதவும். அந்த பங்கு பெருகாவிட்டாலும் கூட நீங்கள் உங்கள் சொந்த பணத்தை போட்டதனால் கவலைப்பட வேண்டாம். நீங்களே கடனில் மாட்டியிருக்கும் போது இந்த மாதிரி முதலீடுகளில் துணிந்தி இறங்க முடியாது. பல்வேறு வாய்ப்புகளை நழுவ விட வேண்டிவரும்.


தேவையான பொருட்களை மட்டும் வாங்குவீர்கள். அதிகமான பொருட்களை வாங்கி குவிக்க மாட்டீர்கள்:

உங்களிடம் பணம் இருந்தால் ஒரு பொருளை வாங்குவீர்கள். இல்லையென்றால் பணத்தினை சேர்த்து வைத்து வாங்குவீர்கள். கடன் வாங்கி அவசியமில்லாத பொருளையும் சேர்த்து பணக்கார மாயையை உண்டாக்கி கொள்ள மாட்டீர்கள். குழந்தைகளும் வீட்டின் நிதி நிலையை அறிந்து நடந்துக் கொள்வார்கள். கடன் வாங்கி எந்த பொருளும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனநிலைமையைக் கொள்ளமாட்டார்கள்.