வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது எப்படி | Invest In Companies Around The World.

நான் எப்போதும் சொல்லும் வாசகம், நேரிடையாக பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் Risk தன்மையை புரிந்து கொண்டு தங்கள் உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஊக வணிகம் மற்றும் சூதாடுவதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கப்பெறும் SIP Investing முதலீட்டின் மூலம் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை நிறைவு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்காக நேரிடையாக பங்குச்சந்தைக்கு வராதீர்கள்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது உங்களது உபரி பணத்தில் தான். செல்வ வளத்தை சேர்க்கவும், சமூகத்தில் தொண்டு செய்வதற்கான நிதியை பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் பெறுங்கள். ஆனால் உங்கள் நிதி இலக்குகளில் அதனை பரிசோதனை செய்ய வேண்டாம். பங்குகள் மூலம் சில வருடங்களில் நீங்கள் அம்பானியாகி விட முடியாது. அதற்கு இரண்டு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும். நீண்டகால தன்மையும், பொறுமையும் அவசியம்.‘

வங்கிகளில் வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக எடுத்து கொள்ளலாம். ஒன்று பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இல்லையெனில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இது போல வேகமாக வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொதுவாக வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். அப்படியிருக்கும் போது வருங்காலங்களில் வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் அதிகமாக இருக்காது (அதிக பணவீக்க காலத்தை தவிர்த்து). எனவே அவற்றுக்கு மாற்றாக பார்க்கும் போது, இன்று Mutual Funds பிரபலமடைந்து வருகிறது.

அதே வேளையில் பரஸ்பர நிதிகள் என்றாலே பங்குச்சந்தை தான் எனவும் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் வருவாய் நன்றாக உள்ளது என அலட்சியத்துடனும் இருந்து விட கூடாது. பரஸ்பர நிதிகள் பல கலவை திட்டங்களை கொண்டவை. நீங்கள் பார்க்கும் சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், பத்திரங்களில் முதலீடு, வீட்டுமனை, தங்கம், பங்குகள் என பல பரிணாமங்களை பரஸ்பர நிதிகளில் ஒரு சேர காணலாம்.

இருப்பினும் ஒருவருடைய தேவை மற்றும் காலத்திற்கு ஏற்ப தான் பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிஸ்க் என்பது எந்த முதலீட்டிலும் உண்டு. குறைந்த ரிஸ்க்(No Risk or Low Risk) கொண்ட லிக்விட் பண்டுகள் முதல் அதிக ரிஸ்க் கொண்ட பங்கு சார்ந்த பண்டுகள்(High Risk) வரை இங்கு கிடைக்கப்பெறுகிறது. திட்ட ஆவணங்களை சரியாக படிப்பதும், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உலக பங்குச்சந்தை முதலீட்டில் நமது நாட்டின் சந்தை மதிப்பு மூன்று சதவீதமே. நம் நாட்டில் பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் மூன்று சதவீதத்திற்கு குறைவே. சமீபத்தில் பங்குச்சந்தையில் புதிய கணக்குகள் அதிகமாக துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மூலம் ஊக வணிகம் மற்றும் தினசரி வர்த்தகத்தில் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான். உண்மை புள்ளிவிவரம் என்னவெனில் நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 கோடி டீமேட் கணக்குகள் உள்ளதாகவும், இவற்றில் ஒரு கோடிக்கும் குறைவாகவே செயல்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது தொடங்கப்பட்ட பங்குச்சந்தை கணக்குகளில் 75 சதவீதம் செயல்படாமல் இருந்துள்ளன. மீதம் சொல்லப்பட்ட ஒரு கோடிக்கும் குறைவான கணக்குகளில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பாதியை கூட பெறாது. இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், யார் உண்மையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று… ஆம், பங்கு தரகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களும்.

வெளிநாட்டு நிறுவன பங்குகளில் நாம் நேரிடையாக முதலீடு செய்வதற்கான சாதனம் நமது பங்குச்சந்தை அமைப்புகளில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். அப்படி காணும் போது, நாம் சிறந்த மூன்று திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

• PPFAS Long term Equity Fund

• Franklin India Feeder US Opportunities

• DSP Blackrock US Flexible Equity

இந்த மூன்று பரஸ்பர நிதிகளில் பராக் பரிக் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராவார். இன்றும் மூன்று திட்டங்களை மட்டுமே கொண்டு செயல்படும் இந்த பரஸ்பர நிதி நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வெறுமென உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு உலக நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பராக் பரிக் தருகிறது. இந்த பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடாக மாதாமாதம் ரூ. 1000 ஐ முதலீடு செய்யலாம். பராக் பரிக் நீண்டகால பங்கு திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகும். இதுவரை 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 3,200 கோடி.

Google, Amazon, Facebook, சுசூகி, MicroSoft, HDFC., ITC., ஆரக்கிள்,  என பல முக்கிய நிறுவனங்களில் இந்த திட்டம் முதலீடு செய்யும். முதலீடு பரவலாக்கத்தில் 55 சதவீதம் பெரு நிறுவனங்களிலும்(Giant), Large cap Fund-களில் 13 சதவீதம், Mid cap Fund-களில் 12 சதவீதம் மற்றும் மீதம் உள்ளவை சிறு நிறுவனங்களில்(Small cap) முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க் கொண்ட இந்த திட்டம் Multi cap முதலீட்டு பிரிவில் வருகிறது. நீண்டகால முதலீட்டிற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.