தவணை முறையில் பொருட்கள் வாங்குவது சிறந்ததா | It Is Best To Buy Products In Installment Or EMI.

நமது நாட்டில் தவணை முறை என்றால், ஏதோ வித்தியாசமான பொருள் வாங்கும் முறை என்ற எண்ணம் உள்ளது. நேரடியாக பணம் கொடுத்து வாங்குவதைப் போல, இது மற்றொரு முறை என்கிற எண்ணம் உள்ளது. ஆனால், இது கடன் மூலம் பொருள் வாங்கும் முறை என்ற எண்ணம் மக்களிடம் இன்னும் சென்றடையவில்லை.

தவணை முறையும் கடன்தான்: 

ஒரு பொருளை வாங்குவதற்கு, ஒரு இடத்தில் கடன் வாங்கி, வாங்குவதற்கும், பொருளை வாங்குபவரிடமே கடன் வாங்குவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆக மொத்தம், கடன் வாங்குகிறோம்.

தவணை எவ்வாறு கணக்கிடப்படுகிறது:

உங்களுக்கு  10,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் வாங்க வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அந்த 10,000 ரூபாய்க்கு பொருளை விற்கும் நிறுவனம், 10% வட்டி வசூலிக்கிறது என்று கணக்கில் கொள்வோம்.

 10,000 + 1,000 (வட்டி) = ₹ 11,000

கடைக்காரர் என்ன சொல்லுவார் என்றால், நீங்கள் ரூபாய். 1,000 செலுத்தி விட்டு (ஆரம்பத் தொகை. ஆங்கிலத்தில் Down Payment) , பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்பார். மிச்ச பணத்தை, 10 தவணைகளாக, ரூ. 1000 வீதம் செலுத்தலாம் என்று கூறுவார்.
ரூபாய். 11,000 - ரூபாய். 1,000 (ஆரம்பத் தொகை) = ரூபாய். 10000 (மிச்சம்)

ரூபாய். 10000 / 10 தவணை = ரூபாய். 1,000 (ஒரு தவணைப் பணம்)
இவ்வாறு, தவணை முறையில், நாம் அறியாமல் மறைமுகமாக, கடனில் மாட்டிக் கொள்கிறோம். தவணையில் பொருள் வாங்குவதன் மூலம், 10% கடனில் மாட்டிக் கொள்கிறோம். நம்மில், பலர் இதனை அறிவதில்லை. அவர்கள் எண்ணுவதெல்லாம், ரூபாய். 1000 ரூபாய் செலுத்தி, உடனடியாக ரூ.10,000 மதிப்புள்ள பொருள் கிடைக்கிறது என்ற எண்ணம் தான். இதைதான், ஆங்கிலத்தில் Instant Gratification என்று கூறுவார்கள். அதாவது, உடனடியாக திருப்தி அடைவது. இது மிகவும் தவறான ஒரு போக்கு.

தவணை முறையில் பொருள் வாங்குவதால் உள்ள தீமைகள்:

நம்மால் வாங்க இயலாத பொருளைக் கூட, வாங்க முடியும் என்கிற ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. மனோதத்துவ ரீதியாக, மறுபடி ஒருவரை அவர்களால் வாங்க இயலாத பொருட்களை இது வாங்கத் தூண்டுகிறது.

தவணை கடனில் மாட்டி விடுகிறது:

தேய்மானம் உள்ள பொருள்களை, விற்க நினைத்தால், தவணை முறையில் வாங்கும் போது, பணத்தின் இழப்பு இன்னும் அதிகம்.
மேற்சொன்ன உதாரணத்தின் படி, ரூபாய். 10,000 மதிப்புள்ள பொருளை, தேய்மானம் காரணமாக அதன் விலை ரூபாய். 9000, ரூபாய். 8000 என்று விலை குறைந்துக் கொண்டே வருகிறது. விலை குறைந்து வரும், ஒரு பொருளுக்கு நீங்கள் அதிக பணத்தை செலுத்தி வருகிறீர்கள். சில மாதங்களுக்குப் பின், அதன் விலை ரூபாய். 6000 இருக்கும்போது, அதை நீங்கள் விற்க நினைத்தால், ரூபாய். 11,000 செலுத்தியபின்பே விற்க முடியும்.

ரூபாய். 11,000 - ரூபாய். 6000 = ரூபாய். 5000 (இழப்பு)
தவணை இல்லாத பட்சத்தில்,
ரூபாய். 10,000 - ரூபாய். 6,000 = ரூபாய். 4000 (இழப்பு)

எனவே, தேய்மானம் உள்ள பொருட்களை தவணையில் வாங்குவதன் மூலம், அதிக பண இழப்பினை சந்திக்கிறோம்.
தவணை முறையில் பொருள் வாங்கும்போது, ஆரம்ப ஏற்பு கட்டணம் (Initial Processing Fee) என்று பல்வேறு கட்டணங்களில் பணத்தை இழக்கிறோம்.

தவணை முறையில், பொதுவாக வட்டி விகிதம் மிகவும் அதிகம்
தவணை செலுத்தாத பட்சத்தில், தவணை நிறுவனம் கொடுக்கும் நிர்பந்தத்தினால், பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
சில தவணை முறைகளில், பொருளுக்கான விலையை நீங்கள் கொடுத்து, வெளியேற நினைத்தாலும் கூட, அபராத தொகை என்று மேலும் பணத்தை இழக்க நேரிடும்.

தவணைக்கு பதிலாக, பொருள்களை எவ்வாறு  வாங்கலாம்:

எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டுமென்றால், அதற்கான பணத்தை சேமித்து விட்டு வாங்குவதே நல்லது. அதற்கான, நிதி திட்டமிடல் அவசியம். உதாரணமாக, ரூபாய். 10,000 பொருள் வாங்க வேண்டுமெனில், மாதம் ரூபாய். 1000 சேமித்து, ரூபாய். 10,000 சேமித்த பின்பு, 10 மாதம் கழித்து வாங்குவது சால சிறந்தது. அதற்கு பதிலாக, ரூபாய். 1000 , தொடர் சேமிப்புத் திட்டத்தில், முதலீடு செய்து, பணத்தை பெருக்கி, ரூபாய். 10,000 சேர்ந்தப் பின்பு வாங்குவது நல்லது. உங்கள் பணம், உங்கள் பொருள். யாருக்கும் எந்த பதிலும் சொல்ல வேண்டியதில்லை. யார் கையையும் ஏந்த வேண்டியதில்லை.

தவணை முறைக்கு உள்ள விதிவிலக்குகள்:

எந்த ஒரு பொருளை தவணை முறையில் வாங்குவதனால், உங்களுடைய எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் அமைகிறதோ, அதனை தவணை முறையில் வாங்கலாம்.
உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு தையல்காரர், தவணை முறையில் தையல் இயந்திரம் வாங்கித் தொழில் தொடங்கினார். அவருக்கு, அந்த தையல் இயந்திரம் வாங்கும் பண வசதி இல்லை. அவருடைய எதிர்காலத்தில், அந்த தையல் இயந்திரம், பல்மடங்காக பணம் பெருக்கி கொடுக்கும் ஒரு சொத்து.
swiggy (ஸ்விக்கி), zomato (ஜோமாடோ) போன்ற உணவு வழங்கும் தொழில்களில் சேருபவர்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்க, போதிய பணமின்றி இருக்கலாம். இவர்கள் தவணை முறையில், இருசக்கர வாகனம் வாங்குவதன் மூலம், ஒரு வேலையும் கிடைக்கும். பணத்தை பன்மடங்கு பெருக்க, இருசக்கர வாகனம் உதவுகிறது.

இவற்றைப் போன்ற காரணங்கள் இல்லையென்றால், எந்த ஒரு பொருளுக்கும், பணம் சேமித்துவிட்டு, வாங்குவதே சாலச் சிறந்தது. தவணை என்ற கடன் முறையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். நம்மால் வாங்க இயலாத பொருட்களைக் கூட, தவணை வாங்க முடியும் என்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்குகிறது. அந்த மாயபிம்பம், நம்மை கடன் வலையில் சிக்க வைத்து விட்டு, எதிர்காலத்தை கேள்விக் குறி ஆக்கிவிடும்.

பணம் சேமித்து, பொருட்களை வாங்குவோம். தவணை முறையில், பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்போம்